தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் – முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

Spread the love

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`55 AM

சென்னை,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மத்திய அரசு என்று சொல்லிக்கொள்ளும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டு நலன்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த திட்டங்களை நாங்கள் இன்று செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இது எல்லாவற்றையும் மக்களுக்கான நம்முடைய கடமை என்று உணர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:–

“கல்வியும், மருத்துவமும் தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது.” கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கவும், சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி, அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கக் கூடிய வகையில் உறுதி செய்யவும், பல்வேறு திட்டங்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய அரசு, சாதாரண, சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு அடையாளம்தான், இந்த முதல்வர் மருந்தக திட்டம். பொதுமக்கள், தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை மாற்றவேண்டும், அவர்களின் சுமையை குறைக்கவேண்டும் என்று இந்த மருந்தகங்களை நாங்கள் திறப்பதற்கு திட்டமிட்டோம். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து, அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டிய காரணத்தால், அதிகமான செலவு ஆகிறது” என்று பலரும் கவலப்பட்ட காரணத்தால், இந்த மருந்தகங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டோம். சொன்னது போன்றே, இன்றைக்கு 1000 மருந்தகங்களை திறந்திருக்கிறோம்.

இந்த மருந்தகங்களைச் சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும், மானியம் மற்றும் தேவையான கடனுதவியை அரசு வழங்கியிருக்கிறது. இந்த மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் முடித்தவர்களிடம் இருந்தும், இல்லை, அவர்கள் ஒப்புதலோடு தொழில்முனைவோர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாயும், கூட்டுறவுச் சங்கமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாவும் வழங்கப்பட்டிருக்கிறது.

3 மாத மருந்தகள் இருப்பில் பராமரிப்பு

அத்துடன், முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப உடனடியாக அனுப்புகின்ற வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது. சாலிகிராமத்தில், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. 38 மாவட்டங்களில், மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட மருந்து கிடங்குகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான ஏசி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி என்று எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மருந்து தேவைப் பட்டியல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில், மருந்துகளை வாகனங்கள் மூலம் இந்த முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், பி.பார்ம், டி.பார்ம் படித்த ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

25% தள்ளுபடி

இந்த முதல்வர் மருந்தகங்களில் சிறப்பு என்னவென்று கேட்டால், இங்கு பொதுமக்களுக்கு 25 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகியிருக்கக்கூடியவர்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலேயே வாங்கி பயன்பெற முடியும். இந்தத் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்திக் காட்டியிருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கும், துறையின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் செய்திருக்கும் பணி, உயிர்காக்கும் பணி. அதனால் தான் பாராட்டுகிறேன்.

நான் முன்பே சொன்னது போன்று, திராவிட மாடல் அரசு என்பது, சாதாரண, சாமானிய மக்களின் நன்மைக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி வரக்கூடிய அரசு. நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, கொரோனா என்கின்ற பெரும் நோய்த்தொற்று பரவியிருந்த காலம். அப்போது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பல சிறப்பு முயற்சிகளை எடுத்தோம். வாரந்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தி, எந்தளவுக்குச் சிறப்பாக செயல்பட்டு கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தினோம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தப்போது, தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 8.09 விழுக்காடு மக்களுக்காகதான் முதல் தவணை தடுப்பூசியும், 2.84 விழுக்காடு மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது. ஆனால், நம்முடைய சீரிய முயற்சிகளால், ஏழே மாதங்களில் இந்த நிலையை மாற்றி, 86.95 விழுக்காடு மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.71 விழுக்காடு மக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் என்று 8 கோடியே 55 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது. ஓராண்டுக்குள் எல்லோரும் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டு, பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு மக்களை காப்பாற்றினோம்.

கொரோனாவால் பாதித்தவர்களை காப்பாற்ற…

கொரோனாவால் பாதித்தவர்களை காப்பாற்ற, துணையாக நம்முடைய அரசு இருக்கிறது என்று உணர்த்த நானே கோவைக்கு சென்றபோது, கொரோனா வார்டுக்குள் சென்றேன். இந்தத் துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய மா.சு மட்டுமல்ல; அமைச்சரவையில் இருக்கக்கூடிய அத்தனை அமைச்சர்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக செயல்பட்டதை நாடே பார்த்தது. இந்த அடிப்படையில் இருந்து உருவானதுதான், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, திருச்சியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்கோடு 7 உறுதிமொழிகள் வழங்கினேன். அதில் ஒன்றுதான், “அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்!” அந்த தொலைநோக்கின் ஒரு பகுதிதான், “மக்களைத் தேடி மருத்துவம்!”

மருத்துவமனைகளை தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்றி “மக்களைத் தேடி மருத்துவம்” செல்லும் காலத்தை உருவாக்கி இருக்கிறோம். இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இந்தத் திட்டத்தில் சிகிச்சை வழங்கியிருக்கிறோம்.

சமூக வளர்ச்சியில் முன்னணி மாநிலம்…

இதே போலத்தான், “பாதங்களைப் பாதுகாப்போம்”, “இதயம் காப்போம்” “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஏராளமான மக்களின் உயிரையும், உடல்நலத்தையும் பாதுகாக்கிறோம்! குழந்தைகள், மாணவர்கள், மகளிர், இளைஞர்கள், முதியவர்கள் என்று ஒவ்வொரு மக்களின் தனித்தனி தேவைகளை உணர்ந்து, பார்த்து, பார்த்து செய்து தருகிறோம். இந்த அணுகுமுறையால்தான் சமூக வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இன்றைக்கு வளர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.

வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலினச் சமத்துவம், தூய்மையான குடிநீர் குறைந்த விலையில், வேலைவாய்ப்பு, பொருளாதார குறியீடு, தொழில் உட்கட்டமைப்பு, சம வாய்ப்புகள், அமைதி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு நுகர்வு உற்பத்தி என்று எல்லா குறியீடுகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

இதெல்லாம் நமக்கு நாமே வாசித்துக்கொள்ளும் பாராட்டுப் பத்திரங்கள் கிடையாது. ஒன்றிய அரசின் நிதி ஆயோக் புள்ளிவிவரங்களே சொல்கிறது. நாட்டிற்கே முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்கக்கூடிய

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம் என்று முற்போக்கான தொலைநோக்கான நாட்டுக்கே முன்னோடியான அத்தனை திட்டங்களையும் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையில் தான் செயல்படுத்தி வருகிறோம்.

மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் நான் அரசு அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த முதல்வர் மருந்தகங்கள் என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கம் கொஞ்சம் கூட சிதையாமல் இன்னும் சிறப்பாக செயல்படுத்துகின்ற அந்த உறுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும்.

எண்ணிக்கையை அதிகரிக்க…

இப்போது திறக்கப்பட்டிருக்கும் ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான்… அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம்… ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தத் திட்டத்திற்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது. பி.பார்ம், டி.பார்ம் படித்த இளைஞர்களை சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான அடித்தளம் அமைப்பதுதான் அந்த நோக்கம்!

‘நான் முதல்வனால்’, இளைஞர்களின் திறன் வளர்க்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு இதுபோன்ற திட்டங்களால் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக்கி வருகிறது. நாம் உருவாக்கும் வாய்ப்புகளால் நமது இளைஞர்கள் உயர்வார்கள்; நமது திட்டங்களால் வளமான நலமான தமிழ்நாடு நிச்சயம் உருவாகும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *