
பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 03, 2025, 06:`00 AM
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில், ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலிலும், நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
இன்று மதியம் 3:00 மணிக்கு மேல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிருஷ்ணா தியேட்டர் அருகே வாகன பிரசாரத்தில் பேசி, பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார். தி.மு.க.,வினர் பிரசார நிறைவு இடம் அறிவிக்கவில்லை. இருப்பினும், வழக்கமாக ஈரோடு பி.எஸ்.பார்க்கில் நிறைவு செய்வது வழக்கம். அவ்விடத்தில் அனுமதி கோரியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேநேரம், இத்தொகுதியில் வாக்காளர்களாக, பொதுமக்களாக உள்ளவர்கள் நீங்கலாக, பிற மாவட்டத்தினர் மாலை, 6:00 மணிக்குள் வெளியேற வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின், ஓட்டுப்பதிவு முடியும் வரை உள்ளூர் நிர்வாகிகள், தேர்தல் பணிகளை கவனிக்க உள்ளனர்.

ஏற்கனவே, பெரிய கட்சிகளுடன் போட்டி இல்லாததால், அமைதியாகவே காணப்பட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதால், போலீசாரும் நிம்மதி அடைகின்றனர். அத்துடன், ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.
