மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு

Spread the love

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`40 AM

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பணியில் இருந்த இளநிலை பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்ற சமூக தன்னார்வலர் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார். மாநில போலீசார் அவரை கைது செய்தனர்.

எனினும் இந்த வழக்கின் விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். மறுபுறம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டும், ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.

பணியில் இருந்த பெண் டாக்டர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் என பல நாட்கள் போராட்டம் நீடித்தது.

இதைப்போல பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் மேற்கு வங்காளத்தில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

டெல்லி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை போல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சியல்டா கோர்ட்டு வழங்கும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *