ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியும் இல்லை – ஆதரவும் இல்லை – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

Spread the love

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 01:`50 AM

சென்னை,

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதனால் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *