
பதிவு: புதன்கிழமை, ஜனவரி 08, 2025, 12:`15 AM
மதுரை,
மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர் பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் வேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் மேலூர் வணிகர் சங்கங்கள் ஆகியவற்றின் துணையோடு டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு, அரட்டாபட்டி நரசிங்கம்பட்டி தெற்குத் தெரு வல்லாளப்பட்டி கிடாரிப்பட்டி கம்பூர் கேசம்பட்டி சின்ன கற்பூரம் பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த பொது மக்களும் இன்று மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இதற்காக நரசிங்கம்பட்டியில் இருந்து பேரணியாக திரண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்தது.

இருந்தும் தடையை மீறி பொதுமக்கள் இன்று காலை 10 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு நடை பயணமாக மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்திறாகு வந்து சேர்ந்தனர்.
தமுக்கம் மைதானம் முன்பு சுமார் 5000 க்கு மேற்பட்டோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பியவாறு பேரணியில் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஒத்தக்கடையில் இருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்கள் நல அமைப்புகளும் வணிகர் சங்கங்களும் உழவர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக போராட்டக்காரர்கள் ஒரு சிலர் அறிவித்தாலும், தொடர்ந்து தமுக்கம் மைதானத்தின் எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மற்றொரு தரப்பார் கூறி வருவதால் இப்போராட்டத்தில் குழப்ப நிலை நீடித்து வருகிறது.

நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அருவிருந்து துவங்கிய இந்த பேரணி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே ஒரு பிரிவினர் சட்டக் கல்லூரி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாகவும் மற்றொரு பிரிவினர் அண்ணா மாளிகை தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாகவும் வருகை தந்தனர்.
இதனால பகுதியில் முழுவதுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தமுக்கம் மைதானத்தின் முன்பாக நெடுஞ்சாலையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அமர்ந்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் முன்பாக பி.ஆர்.பாண்டியன், ரத்தினவேல் ஜெகதீசன் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் உரையாற்றினர்.