
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, 22, 2024 04:20 AM
ராமேஸ்வரம்,
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (டிசம்பர், 22) இரவில் ஏற்பட்ட புயலால் கடல் சீற்றத்தில் மக்களின் மரண ஓலத்துடன் புனித நகரான தனுஷ்கோடி உருக்குலைந்தது. அந்த புயல் ஏற்படுத்திய அழிவின் எச்சங்களாக இடிந்த கட்டடங்கள் இன்றும் காட்சியளிக்கின்றன.
இலங்கையில் சீதையை மீட்டு ராமபிரான் திரும்பிய போது அவர் எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ் (வில், அம்பு) கோடி என ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்கிழக்கு திசையில் ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ.,ல் அமைந்துள்ள இந்நகரம் 100 ஆண்டுகளுக்கு முன்பு புனித தலமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் வணிக நகரமாகவும் விளங்கியது.
தனுஷ்கோடி– இலங்கை தலைமன்னார் இடையே 1914ல் இரு பயணிகள் கப்பல் போக்குவரத்தும், சென்னை முதல் தனுஷ்கோடி வரை ‘போர்ட் மெயில்’ என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இந்த இரு போக்குவரத்தும் மத்திய அரசின் கீழ் தொடர்ந்து இயங்கியது.
இரு கடல்களும் சங்கமிக்கும் இந்த இடத்தில் சூரிய நமஸ்காரம் செய்து புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. தமிழகத்தின் சிறந்த துறைமுகமாகவும், தமிழகத்திற்கு அதிக வருவாய் ஈட்டிய முக்கிய வணிக நகரமாகவும் தனுஷ்கோடி இருந்தது.

இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் தென் கடல் எல்லையில் சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்கிய இந்நகரை சில மணி நேரத்தில் சூறாவளியும், ராட்சத கடல் அலைகளும் புரட்டி போட்டு நகரையே சின்னாபின்னமாக்கி காணாமல் போக செய்த சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இதே நாளில் அதாவது 1964 டிச.,22 இரவு 12:00 மணிக்கு மேல் ஏற்பட்ட புயலில் 140 முதல் 160 கி.மீ., வரை வீசிய சூறாவளியால் ராட்சத அலைகள் எழுந்து தனுஷ்கோடியை தாக்கியது. துாக்கத்தில் இருந்த மீனவர்கள், ரயிலில் தனுஷ்கோடி சுற்றுலா வந்த கல்லுாரி மாணவர்கள், பக்தர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரும் சிக்கி உயிரிழந்தனர்.
சில மணி நேரத்தில் தனுஷ்கோடியில் இருந்த பள்ளி கூடம், தபால் நிலையம், மருத்துவமனை, ரயில் நிலையம், விநாயகர் கோயில், மாதா சர்ச் சேதமடைந்து புயல் அரக்கன் மென்று துப்பிய எலும்பு துண்டுகள் போல் கட்டடங்கள் சிதைந்து கிடந்தன.மறுநாள் (டிச.,23) புயலின் கோரத் தாண்டவத்தின் அடையாளமாக எங்கு பார்த்தாலும் பிணக் குவியல்கள் கிடந்தன. இந்த உடல்களை அடையாளம் காணவும், கணக்கிடவும் முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதனால் இச்சம்பவத்தை தேசிய பேரிழப்பு என மத்திய அரசு அறிவித்தது.

புயல் தாக்கிய சமயத்தில் அங்கிருந்து சில மீனவர்கள் ரயில்வே ஸ்டேஷன் கட்டடம், மணல் திட்டுகளில் நின்று உயிர் தப்பியதாக கூறுகின்றனர். 60 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களுக்கு உருக்குலைந்த கட்டடங்கள் புயல் கோர தாண்டவத்தின் பாதிப்பை உணர்த்தும் வரலாற்று நினைவுச் சின்னங்களாக உள்ளன.
அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்று வரை இங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. 2017ல் பிரதமர் மோடி உத்தரவுப்படி தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதன்பின் மாநில அரசு வேறு எந்த வசதியும் ஏற்படுத்தவில்லை.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இந்நகரின் வரலாறு அழிந்து போகாதபடி இங்கு பிரம்மாண்ட ராமர் சிலையும், பாராங்கற்களில் ராமாயண வரலாற்றை பிரதிபலிக்கும் ஓவிய சிற்பங்கள் வடிவமைத்து இடிந்த நிலையில் கம்பீரமாக காட்சியளிக்கும் சர்ச், கோயில்களை புதுப்பித்து புயலின் சோக வரலாற்றை மக்கள் அறிந்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் ஓரிரு ஆண்டுகளில் சர்ச், கோயில் முழுமையாக இடிந்து மண்ணோடு மண்ணாக புதைந்து போகும் அபாயம் உள்ளது என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் சமூக ஆர்வலர் கூறியதாவது :
புயலுக்கு பிறகு தனுஷ்கோடியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அன்று முதல் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாமல் தனுஷ்கோடியை மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்தன. 2017ல் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை அமைத்த பிறகு ஓராண்டுக்கு ஒரு கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் இங்கு குடிநீர், கழிப்பறை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
சுற்றலா மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தனுஷ்கோடியில் ராமாயணத்தை பிரதிபலிக்கும் வகையில் சிற்பங்கள், ஓவியங்கள் அமைத்து மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் புனித நகரான தனுஷ்கோடி மீண்டும் பொருளாதார நகரமாக உருவாகும் என்றார்.