வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?

Spread the love

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024 08:10 AM

சென்னை,

26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது.

இது, சென்னைக்கு கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் விசாகபட்டினத்தில் இருந்து தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றோ அல்லது நாளையோ வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வறண்ட காற்று உதவியுடன் மீண்டும் தமிழக பகுதிகளை ஓரிரு நாட்களில் அடையக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழக பகுதிகளில் பரவலாக வருகிற 24-ந் தேதிக்கு மேல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், இந்த தாழ்வு பகுதி வலுவிழந்து 26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியமான சூழல் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இன்று முதல் 25 ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று வடக்கு கடலோரப்பகுதிகள், அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஓரிசா கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (22-12-2024) வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மறுநாள் (23-12-2024) மத்திய மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *