மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே ‘பெஞ்சல்’ புயல் கரையைக் கடந்தது

Spread the love

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 1, 2024, 03:10 AM

சென்னை,

நேற்று மாலை 5.30 மணிக்கு கரையக் கடக்க தொடங்கிய புயல் இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையக் கடந்தது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது.

இந்த ‘பெஞ்சல்’ புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவில் மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழைப் பெய்யத் தொடங்கியது. இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை புயல் மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நகர்ந்து வந்தது. நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர சூறாவளிக் காற்றுடன் நிலப்பரப்பை எட்டியது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது.

முதலில் முனைப்பகுதியும், அடுத்து மையப்பகுதியான கண் பகுதியும், இறுதியில் வால் பகுதியும் கடந்தது. இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் கரையக் கடந்தது. அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *