320-ஐ எட்டிய ரத்த சர்க்கரை அளவு: திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்

Spread the love

புதுடெல்லி,

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.50 AM

சிறையில் உள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால், சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக அவருக்கு இன்சுலின் ஊசி, வீட்டில் சமைத்த உணவு போன்றவற்றை வழங்க சிறை நிர்வாகம் மறுத்திருப்பதாக தெரிகிறது.இதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது.

இதற்கிடையே தனது உடல்நிலை தொடர்பாக ஆலோசனை பெற தனது டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச அனுமதி கோரி டெல்லி கோர்ட்டில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி காவேரி பவேஜா நேற்று விசாரித்தார். அப்போது கெஜ்ரிவாலின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். அதேநேரம் கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா? என்பதை ஆய்வு செய்யவும், அவரது பிற உடல்நல பிரச்சினைகளை பரிசோதிக்கவும் மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு நேற்று இரவு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 320- ஐ தாண்டியதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.கெஜ்ரிவால் சிறை சென்ற பின்னர் வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட்டுகள் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *