
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`30 AM
நாகை,
தமிழகத்தின் பிரச்சினை, நம் உரிமைகள் பறிபோகும் பிரச்சினை – கவுரவம் பார்க்க வேண்டாம் – அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் மீண்டும் அழைப்பு – நாகப்பட்டினத்தில் முதல்வர் ஸ்டாலின், ரூ.82.9 கோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில் கவுரவம் பார்க்காதீர்கள். தமிழகத்தின் பிரச்சனை, நம் உரிமைகள் பறிபோகும் பிரச்சனையை அரசியலாகப் பார்க்காமல் வாருங்கள்’’ என்று கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று சொல்லி இருக்கும் சில கட்சிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க நாகை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தி.மு.க., நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
‘‘வருகிற 5ம் தேதி நாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பெரும்பாலும் கட்சியினர் வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் நாங்கள் வர வாய்ப்பு இல்லை, வர முடியாது என்றும் செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
நான் அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, வர முடியாது, வர இயலாது என்று சொல்லி இருப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இது தனிப்பட்ட பிரச்னை அல்ல. இது தனிப்பட்ட கட்சி சார்ந்தது அல்ல. இதனை அரசியலாக பார்க்காமல், தமிழகத்தின் உரிமைக்காக என்பதை உணர்ந்து முடிவெடுங்கள்.
தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தால் தான் நாம் உரிமையை மீட்க முடியும். எனவே, அனைவரும் கவுரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று நினைக்காதீர்கள். இது தமிழகத்தின் பிரச்னை, நம்ம உரிமைகள் பறிபோகும் பிரச்னை, அரசியலாக பார்க்காமல் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்’’.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:
பிரதமர் மோடி பதவி ஏற்ற கடந்த 2014 ம் ஆண்டு முதல் இது வரையிலான இந்த ஒன்றிய அரசின் பத்தாண்டுகளில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மூவாயிரத்து 656 பேர்! அதில் இந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 860 பேர்.
மொத்தம் 611 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் 116 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, நவம்பர் 22-ஆம் தேதி வரை, இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை 736 முறை தாக்கியிருப்பதாக, வெளியுறவுத் துறை இணை அமைச்சரே அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். நான் சொல்லவில்லை. இலங்கையில் என்ன பிரச்சனை என்பதை தெளிவாகவும், என்னென்ன பாதிப்பு என்பதையும், ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய இணை அமைச்சர் அறிக்கையை ஆதாரத்துடன் தாக்கல் செய்திருக்கிறார். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு, ஒன்றிய அரசுக்குதான் இருக்கிறது! ஆனால், செய்கிறார்களா? இல்லை.
2010-ஆம் ஆண்டு முதல் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையே பல கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தைகள், இப்போது நடப்பதில்லை. 2016-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவர் இடையே, அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்படுகிறது!
கடற்படை அடக்குமுறை தொடர்கிறது…
இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இலங்கையின் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தால் கொடுமைகள் அரங்கேறுகிறது! இதுபற்றி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்ன சொல்கிறார்? “இந்திய அரசின் தரப்பில், வெளியுறவுத்துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் நான்கு பேரும், இலங்கை அரசின் தரப்பில், நான்கு பேரும் இணைந்து, ஒரு குழு அமைத்து, தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வருகிறோம்” என்று சொன்னாரே தவிர, ஆனால், இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
அதற்கு முதலில், தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக ஒன்றிய அரசு பார்க்கவேண்டும். பிரதமர் , இதில் நீங்கள் தான் நேரடியாக தலையிட்டு தீர்க்கவேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் – கைது செய்யப்படுவதும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது! இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!
கொடூர தண்டனை சட்டத்தை நீக்கவேண்டும்
நம்முடைய மீனவர்களின் உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில், உறுதியான நடவடிக்கையை நீங்கள் எடுக்கவேண்டும். மிகக் கொடூரமான விதிமுறைகள், தண்டனைகள் அடங்கியுள்ள 2018-ஆம் ஆண்டு சட்டத்தை இலங்கை அரசு முதலில் நீக்கவேண்டும்!
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நீங்கள் பேசவேண்டும்! மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் வழங்க வேண்டும்!
மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிக்கக்கூடிய அந்த கொடுமையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்!
கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டில் மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
இப்படி ஒவ்வொரு விவகாரத்திலும், நாம் நம்முடைய உரிமையை நிலைநாட்ட போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அனைத்துத் திட்டங்களி லும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி முறையாக வருவதில்லை.

மும்மொழித் திட்டம்: நிபந்தனை போடுவதா?
$ இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கூட, நிவாரண நிதியை முழுமையாக தருவது கிடையாது.
$ ஏன், இப்போது பள்ளி மாணவ – மாணவியர் படிப்புக்காக தர வேண்டிய நிதியைக் கூட தருவதில்லை!
$ இந்த நிதியை தரவேண்டும் என்றால், என்ன சொல்கிறார்கள் – மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்கு நிபந்தனை போடுகிறார்கள்!
இந்த ஒன்றிய அரசு ஏன் செய்தது தெரியுமா? தமிழ்நாடு இந்தளவுக்கு முன்னேறியிருப்பதற்கு காரணம் இருமொழிக் கொள்கைதான் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒன்றிய அரசின் அனைத்து புள்ளிவிவரங்களிலும், முன்னணியில் இருக்கிறோமே அது தெரியாதா அவர்களுக்கு? நன்றாக தெரியும்! தெரிந்தும் ஏன் செய்கிறார்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி – தமிழின் தனித்துவம் சிலருடைய கண்களை உறுத்துகிறது அதனால் இப்படி செய்கிறார்கள்.
உலகம் முழுவதும் நம்முடைய தமிழர்கள் பெரிய பெரிய கம்பெனிகளில், பெரிய பெரிய வேலைகளில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், ஆங்கிலம் கற்றுக்கொண்டது! அந்த இடத்தில், இந்தியை கற்றுக் கொண்டிருந்தால், நம்மால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா? முடியவே முடியாது.
நம்முடைய தாய்மொழி தமிழ்! உலகத்துடன் பேச ஆங்கிலம்! வாழ்க்கையில் முன்னேற அறிவியல் – தொழில்நுட்பம் – கணிதம் – சமூக அறிவியல் போன்ற படிப்புகள்! இதுதான் நம்முடைய வெற்றியின் அடிப்படை!
நான் இன்னும் வெளிப்படையாகவே சொல்கிறேன்… இந்தி ஆதிக்கம் எதற்கு என்றால், சிலருடைய சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான்! இதை உணர்ந்த காரணத்தால்தான் இந்தித் திணிப்புக்கு எதிரான நம்முடைய உரிமைக்குரலுக்கு இப்போது, வட மாநிலங்களில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் வருகிறது! இந்த சதியை பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு உணர்ந்துவிட்டது. அந்தச் சதியின் தொடர்ச்சியாகதான், இப்போது நடக்கின்ற மிரட்டல்கள் என்று இளைய தலைமுறையினரும் – ஏன், தமிழ்நாட்டுக் குழந்தைகள்கூட உணர்ந்திருக்கிறார்கள்.

ரூ.10 ஆயிரம் தந்த கடலூர் சிறுமி
செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்… கடலூரைச் சேர்ந்த சிறுமி, நன்முகை! “ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்றால் என்ன? நான் தருகிறேன்” என்று தன்னுடைய சேமிப்புப் பணமான பத்தாயிரம் ரூபாயை காசோலையாக எனக்கு அனுப்பி வைத்தார்! தன்னுடைய தாத்தாவும், பாட்டியும் தமிழாசிரியர்கள் என்று குறிப்பிட்டு, ‘தமிழ் வாழ்க’ என்று தமிழ் உணர்வை – வீடியோவாக அந்தக் குழந்தை வெளிட்டதைப் பார்த்து நான் கண் கலங்கிவிட்டேன்… உடைந்து போய்விட்டேன். அதேபோல, இன்னும் பல பிஞ்சு உள்ளங்கள் நிதி வழங்கியபோது, அவர்களுடைய உணர்வும் – உறுதியும் என்னை நெகிழ வைத்தது… ஆனால், என்னால் மகிழ்ச்சியடைய முடியவில்லை! இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு இருக்கின்ற உணர்வு கூட ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்று வேதனை தான் நான் அடைந்தேன்! பிஞ்சுக் குழந்தைகளுக்குகூட ஒன்றிய அரசின் சதி புரிந்திருக்கிறது. இதுதான், தமிழ்நாடு! இதுதான், தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வு!
இந்த தமிழ்நாட்டிற்காக உழைக்கத்தான், உரிமைகள் பெற்றுத் தரத்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்வு இருக்கிறது. போராடி பெற்ற நம்முடைய உரிமைகளை கூட எப்படியெல்லாம் பறிக்கலாம் என்று நினைப்பவர்களாக இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு, நம்முடைய குரலை நசுக்குகின்ற ஆபத்தாக, தொகுதி மறுசீரமைப்பு வர போகின்றது! அதனால்தான் முன்னெச்சரிக்கை உணர்வுடன், அதற்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறோம்.
நாளை மறுநாள், இது சம்பந்தமாக தமிழ்நாட்டின் உணர்வை, ஒற்றுமையாக ஒருமித்த குரலில் எழுப்பவேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன்… அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும் முறையாக அழைப்பு அனுப்பியிருக்கிறோம். பலரும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு சிலர் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த மேடையில் நின்று, மக்கள் முன்பு நின்று, உங்கள் எல்லோருக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.
தமிழ்நாடு போராடும்
தமிழ்நாடு வெல்லும் தயவுசெய்து, அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வையுங்கள். இது தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினை. சுயநலத்துக்காக, நம்முடைய சந்ததிகளை அடகு வைத்து விடாதீர்கள். உங்கள் முடிவை மனசாட்சியுடன் மறுபரிசீலனை செய்யுங்கள். நல்ல முடிவை எடுங்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வாருங்கள். “எல்லோருக்கும் எல்லாம்” என்ற ஆட்சிப் பாதையில், மகிழ்ச்சியான – மலர்ச்சியான – வளர்ச்சியான தமிழ்நாட்டை உருவாக்குவோம்…
இந்தியாவின் முதன்மை மாநிலமாக வெற்றி நடைபோடுவோம்! அதற்கு எந்த இடர் வந்தாலும், யார் தடை போட்டாலும், அதை வென்று இந்த தமிழ்நாட்டை, மக்களான உங்கள் துணையுடன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காப்பாற்றுவான்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.